|
திரைத் துறையினருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது தமிழக அரசு. தற்போது அவற்றில் மீண்டும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பரிந்துரைக்க திரைப்பட சீரமைப்புக் குழு ஒன்றை முதல்வர் கருணாநிதி இன்று அமைத்துள்ளார். பட அதிபர்கள் ஏவிஎம் சரவணன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேளிக்கை வரியை கழக அரசு அறவே ரத்து செய்த காரணத்தால், தங்களுக்கு வந்து கொண்டிருந்த வரி வருவாய் குறைந்து விட்டதாகக் கூறி உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு தொடர்ந்து முறையிட்டு வருவதாலும், வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் கடந்த ஆட்சியில் மிகுந்த அளவிற்கு உயர்த்தப்பட்டிருந்ததை, கழக அரசு குறைத்தது போன்ற திரைப்படத் துறைக்குச் செய்யப்பட்ட பல்வேறு சலுகைகளின் பயன்கள் பொது மக்களுக்குச் சென்றிடாத நிலை தொடருவதாலும், இவற்றைப் பற்றி மறு ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்று 2009-2010 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப திரைப்படங்கள், திரை அரங்குகள், கேளிக்கை வரி விதிப்பு, வெளிப்புற படப் பிடிப்புக்கான கட்டணங்கள், ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய பட அதிபர்கள் ஏ.வி.எம்.சரவணன், அபிராமி ராமநாதன், கோவை மேயர் வெங்கடாசலம், ஆலந்துர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.எஸ்.பாரதி, உள்துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர், செய்தித்துறை செயலாளர் ஆகியோரை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திரைப்படத் துறையினர், உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து பேசி விவாதித்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும், என முதல்வர் கூறியுள்ளார். |